adsinr

Wednesday, 28 May 2014

வண்ணாரப்பேட்டை – விமான நிலையம் வரை மெட்ரோ ரெயில் கட்டணம் ரூ.40

சென்னையில் மெட்ரோ ரெயில் திட்டம் இரு வழித்தடங்களில் 45 கிலோ மீட்டர் தூரத்துக்கு நிறைவேற்றப்படுகின்றன.
திட்டச்செலவு ரூ.14,600 கோடி என நிர்ணயிக்கப்பட்ட போதிலும் கட்டுமானப் பணி, பொருட்கள் விலை உயர்வு காரணமாக திட்ட மதிப்பீடு ரூ.20 ஆயிரம் கோடியை எட்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளன.
முதல் கட்டமாக வரும் அக்டோபர் மாதம் இறுதியில் கோயம்பேடு – ஆலந்தூர் இடையே 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு பறக்கும் பாதையில் மெட்ரோ ரெயில் போக்குவரத்து தொடங்க உள்ளது.
கோயம்பேடு – ஆலந்தூர் இடையே சோதனை ஓட்டமும் தொடங்கி விட்டது. இந்த பாதையில் தெற்கு ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் அக்டோபர் மாதம் சோதனை நடத்த உள்ளார். அவர் அறிக்கை கிடைத்ததும் மெட்ரோ ரெயில் போக்குவரத்து தொடக்க விழா தேதி இறுதி செய்யப்படும்.
இதற்கிடையில் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்வதற்கான கட்டணம் இறுதி செய்யப்பட்டு, மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:–
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் 3 இயக்குனர்கள், தமிழக நிதித்துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள், டெல்லி மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரி, மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சக அதிகாரி ஆகியோரை கொண்ட கட்டண நிர்ணயக் குழு பல கட்டங்களாக ஆலோசனை நடத்தி மெட்ரோ ரெயில் கட்டணத்தை இறுதி செய்துள்ளது.
அதன்படி சென்னை வண்ணாரப்பேட்டையில் இருந்து விமான நிலையம் வரை செல்ல (24 கி.மீ.) ரூ. 40 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குறைந்தபட்ச கட்டணம் ரூ.10. அதற்கு அடுத்ததாக ரூ.15, ரூ.20, ரூ.25, ரூ.30 என முழுத் தொகையாகவே கட்டணம் வசூலிக்கப்படும்.
சென்னை மெட்ரோ ரெயிலுக்கான கட்டண விவரம் அதிகாரப்பூர்வமாக ஆகஸ்டு மாதம் வெளியிடப்படும்.
ஒரு நிலையத்தில் இருந்து புறப்பட்டு ஒன்று முதல் 2 கி.மீ. தூரத்தில் அடுத்த நிலையம் வந்து விடும் என்பதால் மணிக்கு 34 கி.மீ. வேகத்தில் மெட்ரோ ரெயிலை இயக்க திட்டமிட்டுள்ளோம்.
அதன்படி வண்ணாரப் பேட்டையில் இருந்து விமான நிலையத்திற்கு 40 நிமிடங்களில் போய் சேர முடியும். சிக்னல், கிராசிங் போன்ற இடையூறுகள் இல்லை என்பதால் தாமத மின்றி மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment